×
 

முதல்வர் விஜய்க்கு டெல்லி மறைமுக சப்போர்ட்!? தமிழகத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்காததன் பின்னணி?!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மட்டும் முக்கியமாக 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது.

சென்னை: இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் 6 தொகுதிகளுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வராதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. 

ஆனால் தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்தால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

இந்த அதிரடி ராஜினாமாக்கள் தமிழக அரசியலை பெரும் புயலாக மாற்றியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்னும் மௌனம் காத்து வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, தொகுதி காலியானதிலிருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான ராஜினாமாக்கள் மே-ஜூன் மாதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நவம்பர்-டிசம்பர் வரை கால அவகாசம் உள்ளது. எனவே அவசரம் இல்லை என தேர்தல் ஆணையம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ராஜினாமாக்களின் செல்லுபடியாக்கம், கட்சித் தாவல் தடைச் சட்டம், கொறடா உத்தரவு உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் நிலுவையில் உள்ளன. அதிமுக தரப்பில் இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இத்தகைய சட்டப் போராட்டங்கள் நடைபெறும் போது தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தயங்குவதாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையம் பொதுவாக ஒரே நேரத்தில் பல தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகச் சுமையை குறைக்க விரும்புகிறது. தமிழக அரசியல் களம் இன்னும் நிலையற்ற நிலையில் இருப்பதால், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

தவெக அரசுக்கு சாதகமாக டெல்லி செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வரும் மாதங்களில் தமிழக இடைத்தேர்தல் தமிழக அரசியலை முழுமையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share