×
 

திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

திங்கள் முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் உரைகளுக்கான நேரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவுப் பகுதியில், அவையின் நேர மேலாண்மை மற்றும் உரைகளின் தரம் குறித்து உறுப்பினர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களைப் பேரவைத் தலைவர் வழங்கினார்.

வரும் திங்கட்கிழமை முதல் ஒரு உறுப்பினர் பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். நேரம் கடந்தால் தானாக அடுத்த உறுப்பினரைப் பேச அழைத்து விடுவேன். இதற்கு யாரும் சங்கடப்படவோ கோபித்துக் கொள்ளவோ கூடாது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி வந்துள்ள புதிய உறுப்பினர்களுக்குப் பேச அதிக நேரமும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. யார் எப்படிப் பேசுகிறார்கள், அவையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் நேரலையில் நேரடியாக பார்த்து வருகிறார்கள்.

முன்பு நடந்த கூட்டத்தொடர்களில் உறுப்பினர்களுக்கு 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பேச நேரம் வழங்கப்படும். ஆனால் இப்போது 25 நிமிடங்கள் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால், தேவைப்பட்டால் மாலை நேரத்திலும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தலாம் என அலுவல் ஆய்வுக் குழுவுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் அவதூறுகளையும் வீண் குற்றச்சாட்டுகளையும் தவிர்க்கும்போதுதான் அவையின் பொன்னான நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களை ஆய்வு செய்தேன்; அதில் தேவையானவற்றை வைத்துவிட்டு, தேவையில்லாத கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளேன்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பேச நினைக்கும் முக்கிய விஷயங்களை எழுதிக் கொடுத்தால், அவை பதிவேட்டில் ஏற்றப்பட்டு அச்சு வடிவில் உங்களுக்கு வழங்கப்படும். அதை உங்களது தொகுதி மக்களிடம் நீங்கள் அவையில் பேசியதாக வழங்கிக் கொள்ளலாம்.

பேரவையின் நேரத்தைச் சீராகப் பயன்படுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, சட்டமன்ற வட்டாரத்தில் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share