×
 

சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்ற உறுதியான அறிவிப்புடன், தமிழக மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். "தனிக்காட்டு ராஜா" போன்று எந்தக் கூட்டணியும் இன்றி தனிப்போராட்டத்தைத் தொடர்வது கட்சியின் கொள்கையாக உள்ளது.

இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில், "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு" என்ற பெயரில் மாநில அளவிலான பிரம்மாண்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆலம்பட்டி புதூர் பகுதியில் இந்த மாநாடு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 

சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் விரிவான மாநாட்டுத் திடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்காகவே தனியாக பெரும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாடு மதியம் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நீடிக்கும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரைகள் ஆற்றுவார்கள்.

இதையும் படிங்க: “13 கோடி தமிழர்கள் எப்படி சிறுபான்மை?” - மத அரசியலை சுளுக்கெடுத்த சீமான் ஆவேச பேச்சு!

மிக முக்கியமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்ய உள்ளார். இதில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ஆகியோர் இடம்பெறுவர். இது சமத்துவம் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கட்சியின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

தற்போது தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியால் சீமானின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால், "என் வழி தனி வழி" என்று அழுத்தமாகக் கூறி வரும் சீமான், தனது ஆதரவாளர்களின் வாக்குகளில் எவ்வித சேதாரமும் ஏற்படாமல் பாதுகாப்பது மட்டுமின்றி, மாற்றத்திற்கான இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறார்.

சமீப காலமாக சீமான் நடத்திய சிறப்பு மாநாடுகள் கவனம் ஈர்த்துள்ளன. மதுரையில் 'மாடுகளின் மாநாடு', சென்னையில் 'மரங்களின் மாநாடு', தர்மபுரியில் 'மலைகளின் மாநாடு', கல்லணை அருகே 'நீர் மாநாடு' போன்றவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. சிலர் இவற்றை கேலியாகப் பார்த்தாலும், இயற்கை, விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல தளங்களில் கட்சியின் செல்வாக்கை விரிவாக்கும் முயற்சியாக அரசியல் நோக்கர்கள் இதைப் பார்க்கின்றனர்.

இதற்கிடையே, ஆலம்பட்டி புதூர் மாநாட்டுத் திடலுக்கான கால் கோள் (பூமி பூஜை) விழா இன்று (பிப்ரவரி 4) காலை நடைபெற்றது. கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னிலை வகித்து மாநாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு நாம் தமிழர் கட்சியின் 2026 தேர்தல் தயாரிப்புகளுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாற்றத்திற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவர் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: "ஜனநாயகன் படத்த ஏன் இழுத்தடிக்கிறீங்க?" விஜய் பட விவகாரத்தில் சென்சார் போர்டை சாடிய சீமான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share