கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??
ஆனால் இளமையில் மதுவிற்கு அடிமையாகாமல் இருந்தால் பின்னர் அந்தப் பழக்கம் உருவாகாது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில், மதுப்பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதைத் தடுக்கும் நோக்கில், உள்ளூர் மக்களே முன்வந்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். 2026 ஆகஸ்ட் 2 முதல் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினால் அவர்களுக்கும் அதே அளவு அபராதம் விதிக்கப்படும் என ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பேனர்களில் எழுதப்பட்டு, மைக் மூலம் தெருத்தெருவாக அறிவிக்கப்பட்டது. “மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்ற முழக்கத்துடன், கிராமத்தின் அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த வீடியோ மற்றும் அறிவிப்பை பலரும் வரவேற்று, இது மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் எனப் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!
தமிழ்நாட்டில் மதுவின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஆண்களில் சுமார் 34 சதவீதம் பேர் தினசரி குடிக்கும் நிலை நிலவுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடிக்கும் மேல் மது விற்பனையாகி, அரசுக்கு வருவாய் கிடைத்தாலும், மக்கள் அதே அளவு பணத்தை இழந்து வறுமையில் சிக்கிக் கொள்கிறார்கள். பலர் வேலைக்குச் செல்லாமல் தினமும் 200 முதல் 500 ரூபாய் வரை மதுவுக்கே செலவிடுகின்றனர். இதனால் இளம் வயதிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இருந்தும் மதுப்பழக்கம் தடைக்கல்லாக உள்ளது. திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண வேலைகளிலும் ஒரு தம்பதியர் மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஈட்ட முடியும். சேமிப்புடன் வாழ்ந்தால் கடனில்லாத வாழ்க்கை சாத்தியம். ஆனால் இளமையில் மதுவிற்கு அடிமையாகாமல் இருந்தால் பின்னர் அந்தப் பழக்கம் உருவாகாது.
எனவே விழிப்புணர்வுடன் கட்டுப்பாடுகள் அவசியம். விழுந்தமாவடி கிராமத்தின் இந்த முயற்சி, இளைஞர்களைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நல்லதொரு தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!