×
 

"50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த 50 நாட்களில் 9 சாதிய ஆணவ கொலைகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள திராவிடர் தமிழர் கட்சி, இதனைத் தடுக்கச் சிறப்பு தனிச்சட்டம் இயற்றக் கோரி முதலமைச்சர் விஜய்க்கு வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், அவற்றை அடியோடு தடுக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், திராவிட தமிழர் கட்சியின் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், சிறப்புச் சட்டம் இயற்றக் கோரியும் முற்போக்கு அமைப்பினர் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களும் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சியின் போது முன்னாள் நீதியரசர் கே.என். பாட்ஷா தலைமையில் சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அந்த கமிட்டி அமைக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும், அதன் அறிக்கை இதுவரை அரசிடம் சமர்ப்பிக்கப்படவோ அல்லது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவோ இல்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தில் 'மாற்றம்' என்ற முழக்கத்துடன் மக்கள் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்து, ஏறக்குறைய 50 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால், இந்த 50 நாட்களுக்குள்ளாகவே தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 9 ஆணவக் கொலைகள் நடந்துள்ளது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. இதனைத் திராவிட தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாற்றம் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கக் கூடாது. நேற்றைக்கு நடந்த மக்கள் விரோத செயல்பாடுகளும் அநீதிகளும் இன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் உண்மையான மாற்றமாகும். இந்த ஆணவக் கொலை விவகாரத்திலும் தவெக அரசு அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

இதையும் படிங்க: ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

இதுவரை நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு முதலமைச்சரோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ விரிவான, உறுதியான எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. வழக்கம் போல 'வருந்துகிறோம்' என்று சம்பிரதாய வார்த்தைகளைக் கூறுவது எந்த வகையிலும் தீர்வாகாது என்று சாடிய அவர், இனிமேல் தமிழ் மண்ணில் ஆணவப் படுகொலைகள் தொடர்வதைத் தடுக்க முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சிறப்புச் சட்டம் (Special Anti-Honor Killing Act) ஒன்றை உடனடியாக இயற்றி அமுல்படுத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share