மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்..! ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலம்..!!
சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வாசலில் 2025 ஆகஸ்ட் முதல் நாளில் தொடங்கிய தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், திமுக ஆட்சியில் நடைபெற்ற முக்கியமான தொழிலாளர் போராட்டங்களில் ஒன்றாக அமைந்தது. சென்னை மாநகராட்சியின் பதினைந்து மண்டலங்களில், ஐந்தாவது மண்டலமான ராயபுரம் மற்றும் ஆறாவது மண்டலமான திரு.வி.க. நகர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். பலர் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சுய உதவிக்குழுக்கள் மூலம் மாநகராட்சியின் கீழ் பணியாற்றியவர்கள்.இந்தப் போராட்டத்தின் மையக் கோரிக்கை, தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதும், நீண்டகாலமாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமாகும். முந்தைய அதிமுக ஆட்சியில் பத்து மண்டலங்களின் தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தன.
மீதமுள்ள மண்டலங்களில் இரண்டைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்பட்டபோது, தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார்மயம் சென்றால் சம்பளம் குறையும், பணி பாதுகாப்பு இழக்கப்படும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியிருந்ததால், ஆட்சிக்கு வந்தபின் இத்தகைய நடவடிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!
இந்த நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கனவே திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த சூழ்நிலையில் மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மதுரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!