×
 

செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆழமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கல் குவாரிகள் மூலம் சட்டவிரோதமாக கனிமவளங்களை சுரண்டுவது, அரசு விதிகளை மீறி அதிக அளவில் சுரங்கம் செய்வது, அபராதங்கள் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து இயங்குவது போன்றவை பொதுவானதாகிவிட்டன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலச்சரிவு அபாயம், நீர்நிலைகள் அழிவு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுதல் போன்ற பல்வேறு தீவிர பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்த கொள்ளைக்கு பின்னால் சில அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் மாவியா கும்பல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பரவலான கருத்து.இத்தகைய சூழலில், சமீபத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் பகுதியில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஒரு கல்குவாரியில் சட்டவிரோத கனிமவள சுரண்டல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், உள்ளிட்டோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கல்குவாரி திமுகவைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதாகவும், கேமரா, ஒளி உபகரணங்கள் உடைக்கப்பட்டதாகவும், கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்... அதிமுக கடும் கண்டனம்..!

தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக, அமமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும், ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்திய அராஜகமாகவும் விமர்சித்துள்ளன. தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புகார் கொடுத்த செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊடகத்துறையின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பகீர் தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share