ரத்தம் படிந்த கையுறை.. ICU- வில் சுகாதாரத்துறை..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!
திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கலைவாணி என்பவர் வயிற்று வலி காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில், ஸ்டாண்ட் இல்லாததால் அவரது மகன் குளுக்கோஸ் பாட்டிலை கையில் ஏந்தியவாறு நிற்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதனை சுட்டிக்காட்டி திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விடியா திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீரழிந்து உள்ளது எனினும், அதில் முதல் இடம் பிடிப்பது சுகாதாரத்துறையாகதான் இருக்கும் என்று கூறியுள்ளது. ICUவில் சுகாதாரத்துறை என்று எடப்பாடி பழனிச்சாமி பலமுறை எச்சரித்துவிட்ட பின்பும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு திருந்திய பாடில்லை என்று தெரிவித்துள்ளது.
மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என சுகாதாரத்துறையே ஓட்டையாக உள்ளது என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு, விழுப்புரம் அரசு மருத்துக்கல்லூரியில் ரத்தம் படிந்த கையுறைகளைகளும், ஏற்கனவே பயன்படுத்திய சிரின்ஜ்கள் மீண்டும் பயன்படுத்துகின்றன என்ற மிகவும் அபாயகரமான செய்தி வெளியானது எனவும் சுட்டிக்காட்டி உள்ளது.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!
இந்த சீர்கேட்டின் தற்போதைய விடியலாக, கலைவாணி என்ற நோயாளிக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் குளூக்கோஸ் ஏற்றுவதற்கு அடிப்படை சாதனமான ஸ்டான்ட் கூட இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்த விடியல் இதோடு நிற்கவில்லை. இன்னும் பெரும்கொடுமையாக, போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், தூய்மை பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமையும் அரங்கேறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் QPMS தூய்மை பணியாளர்களான கண்ணன் மற்றும் அருண் ஆகியோர், பிரேத பரிசோதனை, தீவிர சிகிக்சை, அவசர சிகிக்சை, மற்றும் சில அறுவை சிகிக்சை செய்து வருவதாக செய்திகள் வருவதாகவும் இதன் விளைவாக ஒருவருக்கு தனது கால் ஒன்றை விட்டு எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அமைச்சரோ மாரத்தான் ஓடி போட்டோஷூட் எடுப்பதிலும், புகார் கொடுப்பவர்களை மிரட்டுவதிலும் மட்டுமே முனைப்பாக இருப்பது வெட்கக்கேடானது என்றும் இந்த லட்சணத்தில் தனது துறையை வைத்திருக்கும் இந்த அமைச்சர் சார்-க்கு, எங்களைப் பற்றி வாய்கிழிய பிரஸ் மீட் கொடுக்க கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் கடுமையாக சாடி உள்ளது. தினமும் மாரத்தான் அமைச்சருடன் வாக்கிங் செல்லும் பொம்மை முதல்வர், சினிமா விமர்சனம் கேட்பதோடு நில்லாமல், மருத்துவத் துறை பற்றியும் கேட்டறிந்து, மக்களுக்கு அடிப்படையான மருத்துவ சேவையை சீர்செய்ய இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை வஸ்து பற்றி பேச இபிஎஸ் யோக்கிய சிகாமணியா? வெளுத்து வாங்கிய மா.சுப்பிரமணியன்!!