முருகனுக்கு அரோகரா! அன்பா? அரசியலா.. இபிஎஸ்க்கு வேல் பரிசளித்த அதிமுகவினர்!
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வேல் பரிசாக அளித்த சம்பவம் அரசியலில் பேச பொருளாக மாறி இருக்கிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அதனடிப்படையில் மதுரையில் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. அதற்கு எங்களது வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். இதனிடையே, முருக பக்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்த்து செய்தி ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பாஜகவின் கொள்கைகளை வழிமொழிகிறார் என்ற விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பிற கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மக்கள் விரோத மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான கொள்கைகளை ஆதரிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…
பாஜகவுடன் மறைமுகமாக இணைந்து, அதிமுகவின் திராவிடக் கொள்கைகளை விட்டுவிட்டு பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகளை ஆதரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மதுரையில் பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், முருகன் மாநாட்டை ஆதரிப்பது பாஜகவின் மத அரசியலுக்கு எடப்பாடி ஒப்புதல் அளிப்பதற்கு சமம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு அதிமுகவினர் வேல் பரிசாக அளித்தனர். மேலும் பிரம்மாண்ட மாலை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு வேல் பரிசாக கொடுக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பேசிப் பொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்