×
 

தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

சிவி சண்முகம் சமீபத்தில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அணியில் இணைய முடிவு செய்துள்ளார். தவெக தலைமை இணைப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், அவர் மாநில அளவிலான பதவியை எதிர்பார்ப்பதால் பேச்சுவார்த்தை தற்போது தாமதமாகி வருகிறது. இந்த இணைப்பு இறுதியாகி விட்டால், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தவெகவுக்கு கணிசமான பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக ஆட்சி அமைத்த பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெகவுக்கு தாவியுள்ளனர். குறிப்பாக, அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏக்களில் ஆறு பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் இணைப்பு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய் பின்னால் அணி திரள்வதன் மூலம் கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அதிமுகவினரில் 90 சதவீதம் பேர் தவெகவில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த தவெக தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட மாவட்டங்களில் தவெகவை பலப்படுத்த சிவி சண்முகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் கூட்டாக குரல் எழுப்புவோம்! மேகதாது அணைக்கு எதிராக களம் புகுந்த சவுமியா அன்புமணி!

சிவி சண்முகம் சமீபத்தில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார். தவெக ஆட்சி அமைத்த பிறகு அதிமுகவிலேயே தொடர்வது என்ற மனநிலையில் இருந்த அவர், கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு பதவிகள் மீண்டும் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அதிமுகவில் தொடர்வதில் எந்த பயனும் இல்லை என முடிவுக்கு வந்துள்ளார்.

சிவி சண்முகம் மட்டுமின்றி, சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ், திருத்தணி எம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித் தேவன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைய தயாராகி வருகின்றனர். இவர்களில் சிவி சண்முகம் மட்டும் மாநில அளவிலான பொறுப்பை கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து தவெக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்த தடை மற்றும் குதிரை பேர புகார்கள் காரணமாக தவெக தலைமை தற்போது நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. 

எனினும், அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக இரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். சிவி சண்முகம் தவெகவில் இணைந்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தவெகவுக்கு கூடுதல் பலம் கிடைப்பதுடன், அதிமுகவின் ஒட்டுமொத்த அமைப்பு மேலும் பலவீனமடையும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இதையும் படிங்க: அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை! தலைமை ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share