அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற ஆலமரத்தை அசைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் என த.பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இந்த அரசியல் நகர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், அதிமுகவின் அடித்தளம் மிகவும் வலுவானது என்றும், சிலர் வெளியேறுவதால் கட்சியின் வலிமையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஆலமரம்போல் வேரூன்றி நிற்கும் இயக்கம் என குறிப்பிட்டார். அந்த இயக்கத்தை சிலர் பலவீனப்படுத்தலாம் அல்லது அசைக்கலாம் என்று கருதுவது முற்றிலும் தவறான எண்ணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். கட்சியின் அடிப்படை தொண்டர்களும் நிர்வாகிகளும் தற்போதைய தலைமையின் மீது முழு நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது அவர்களது தனிப்பட்ட முடிவாகும் என்றும், அவர்கள் பணம் அல்லது பதவி ஆசை போன்ற காரணங்களால் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் பொன்னையன் விமர்சித்தார். அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறிச் செல்லும் நடவடிக்கைகள் அதிமுகவின் வளர்ச்சியையோ மக்கள் செல்வாக்கையோ பாதிக்காது என்றார்.
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உறுதியாக அணிவகுத்து நிற்பதாகவும், எதிர்கால தேர்தல்களிலும் கட்சி வலுவான சக்தியாக திகழும் என்றும் பொன்னையன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!