தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, புதிய பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கழகப் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தவெக அரசைச் சாடி மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த அதிரடி அறிக்கையின் முழு விவரம் வருமாறு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 6 வயது குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை உள்ள பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். ஆனால், தற்போதைய புதிய ஆட்சியில் 3 வயது பெண் குழந்தையைக்கூடச் சீரழிக்கும் விவரிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் கேட்போர் மனதை உறைபனி வேதனைக்குள்ளாக்கியுள்ளது. கொடுமையிலும் கொடுமையாக, பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளில் சிலவற்றில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்த அடுக்கடுக்கான குற்றச் சம்பவங்களை அனல் பறக்கப் பட்டியலிட்ட அவர், தூத்துக்குடி அருகே த.வெ.க. நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்து நகை பறிப்பு, மதுரை திருமங்கலத்தில் 13 வயது சிறுமி நான்கு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவலம், கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்டது எனத் தமிழ்நாடே தற்பொழுது குற்ற பூமியாக மாறியுள்ளது. ஆனால், இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் சினிமா வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் திரு. விஜய், எங்கள் மீது நாலுகால் பாய்ச்சல் காட்டியிருப்பது அவரது தகுதியையும், தரத்தையும் மட்டுமே உணர்த்துகிறது என்று சாடினார்.
இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!
பொதுவாக இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், பெரியவர்களை மதித்தல் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதலமைச்சர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையைத் தற்பொழுது நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். இதனால் ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதிலும் எழுந்துள்ளது. முடிந்தால் இளைய சமுதாயத்தினரை இந்த அரசு நல்வழிப்படுத்தும் பணிகளில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியைப் பின்னால் இருந்து வழிநடத்துபவர்களையும் ஒருபோதும் மன்னிக்காது என்று ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தவெக அரசுக்கு மிக உறைப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!