"அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
260 பேரின் உயிரைப் பறித்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை வரும் அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு மற்றும் விமான விபத்து புலனாய்வு பீரோ (AAIB) தெரிவித்துள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா (AI-171) போயிங் 787 டிரீம்லைனர் விமானம், டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள், பணியாளர்கள் மற்றும் தரைப்பகுதியில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து குறித்துத் தற்சார்பற்ற, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலான விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் AAIB அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தனர். "விமான விபத்து தொடர்பான இறுதி வரைவு அறிக்கை (Draft Final Report) வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட உறையில் (Sealed Cover) தாக்கல் செய்யப்படும்" என்று உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும், இந்த விசாரணை குறித்து எழும் சந்தேகங்களுக்குப் பதிலளித்த AAIB, "இந்த விசாரணை வெறும் உள்நாட்டு அதிகாரிகள் அல்லது சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்கக (DGCA) அதிகாரிகளுடன் மட்டும் நடத்தப்படும் சாதாரண விசாரணையல்ல. சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி (ICAO), விமான பாகங்களை தயாரித்த வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் விமானிகள் கூட்டமைப்பின் தரவுகள் எனப் பல தரப்பிலும் விரிவான ஆய்வுகள் மற்றும் 'சிமுலேஷன் சோதனைகள்' (Simulation Tests) நடத்தப்பட்டு வருகின்றன" எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
விமானத்தின் முக்கிய பாகங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டதால் தான் அறிக்கை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், AAIB அமைப்பின் இறுதி அறிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்பதாகத் தெரிவித்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: விலங்கு பலி தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! தமிழக அரசின் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ வரவேற்பு!