“ஒரு வாரம் டைம்...” - அஜித் மரண வழக்கில் அதிரடி திருப்பம் - சிபிஐ இயக்குநருக்கு பறந்த உத்தரவு
அஜித்குமாரின் கொலை வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும், வழக்கு விசாரணையை ஒரே வாரத்தில் துவங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத காவல் மரணங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்களைக் கொணர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அமர்வில் வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரலால் ஜான் சுரேஷ் மற்றும் அரசுத் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் வழக்கு.. டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி..!
அப்போது அரசுத்தரப்பில், "காணொளி வாயிலாக, வழக்கை பாரப்பவர்கள் விசாரணையை பதிவு செய்து, ஒளிபரப்பக் கூடாது என விதிகள் உள்ளன. அதனை மீறி சில விசாரணை காட்சிகள் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பட்டுள்ளன. அது தொடர்பாக உரிய நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அது குறித்து தனியே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுத்தரப்பில், "அஜித்தின் சகோதரருக்கு அரசுவேலையும், குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும்வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், "சாத்தான்குளம் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை தாமதமாக உள்ளது. அந்த தாமதம் இந்த வழக்கில் இருக்கக்கூடாது. அண்ணா பல்கலை வழக்கு, சாத்தன்குளம் வழக்கு, ஸ்டெர்லைட் வழக்கு என சிபிஐக்கு மாற்றப்பட்ட பல வழக்கு விசாரணைகளில் தாமதம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இந்த நீதிமன்றம் விசாரணையை கண்காணிக்கும். மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துவிட்ட நிலையில், மீதி விசாரணையை சிபிஐ முடிக்கும். அஜித்தின் தாயாருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.
மாவட்ட நீதிபதி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.
இதில் அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணத்தில் விதிமீறல்கள் இருப்பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதும் தெரியவருகிறது. நீதிபதியின் அறிக்கை, அஜித்தின் மரணம் சட்டவிரோத லாக் அப் டெத் என்பது உறுதிபடுத்தியுள்ளது.
அஜித்குமாரின் கொலை வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை 1 வாரத்தில் சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும், அந்த அலுவலர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும். அனைத்து தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும், தடய அறிவியல்துறை அறிக்கையை 1 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!