கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!
கீழடி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கீழடி அகழாய்வு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் 2013 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இது தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை, குறிப்பாக கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான எழுத்தறிவு மற்றும் நகர நாகரிகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு முதலில் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடரப்பட்டது.
கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா. இவர் 2014 முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை வழிநடத்தி, வைகை நதி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தினார். முன்னதாக 2017ல் அவர் அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார், இது அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்
இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது மத்திய தொல்லியல் துறை. 2024ம் ஆண்டு செப்டம்பரில், இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இது பலரால் பாராட்டப்பட்டது. அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.
தற்போது தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணா, டெல்லியிலிருந்து மீண்டும் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் மத்திய தொல்லியல் துறையின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. அமர்நாத் தாக்கல் செய்திருந்த கீழடி ஆய்வறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கேட்டிருந்த நிலையில் இடமாற்றம் நடந்துள்ளது. தற்போதைய நொய்டா இடமாற்றம், கீழடி ஆய்வறிக்கை தொடர்பான சர்ச்சைகளுடன் தொடர்புடையதாக சிலர் கருதுகின்றனர். மத்திய அரசு அவரது அறிக்கையை திருப்பி அனுப்பியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இந்த பணியிட மாற்றத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
தமிழர்களின் நாகரீகத்தையும், தொன்மையையும் கீழடி ஆய்வின் உயரச் செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை மத்திய அரசு பணியிடம் மாற்றம் என்ற பெயரில் அலைக்கழிக்கிறது. இதன்மூலம் மனதளவில் அவருக்கு பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் செயல்படுகிறது. மத்திய அரசு.
தமிழர்களின் பெருமையை, உலகிற்கு உரக்க சொல்லிய அவரின் ஆய்வறிக்கையை வெளியிடாமல் இதுபோன்ற செயலில் மத்திய ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!