அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...
அம்பாசமுத்திரத்தில் அதிமுக எம்எல்ஏ படத்துடன் அச்சிடப்பட்ட டோக்கன்கள் மற்றும் நோட்டீஸ் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வர உள்ள ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகல் பாராமல் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களை உடனடியாக வாகன சோதனை மூலம் பறிமுதல் செய்வதோடு, அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் தரும் புகார்களின் அடிப்படையில் பணம் மற்றும் பரிசுபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகப்படும் அரசியல் புள்ளிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வந்த லட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்தபோது அதில் அதிமுக கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட 62 டோக்கன்கள் மற்றும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ்கள் இருந்தன.
குறிப்பாக அந்த டோக்கனில் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் உருவ படம் பொறிக்கப்பட்டு 62 கட்சி பூத் சிலிப்களும், 360 நோட்டீஸ்களும் இருந்தன. அவற்றை உரிய அனுமதி பெறாமல் கொண்டு சென்றதாக அதிகாரிகள் டோக்கன்கள் மற்றும் நோட்டீஸ்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!
பின்னர் அவற்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். குறிப்பாக இந்த டோக்கன்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் மேலசடையன்குளம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், இடம் விற்ற பணம் ரூபாய் 6 லட்சத்து 10 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்றார். ஆனால் உரிய ஆவணம் இல்லாத்தால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக டோக்கன்கள் மற்றும் அதிகளவு பணம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!