அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!
நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 77 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயின்ட் பீட்டர் பால் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலை, ஏற்றுமதி நோக்கத்துடன் மீன் மற்றும் இறால் பொருட்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 77 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.
உடனடியாக மீட்புப் படைகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தன. சம்பவத்தன்று இரவே ஜூவான் மற்றும் மலோத்தி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
49 பேர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். பலரின் உடல்நிலை தீவிரமாக இருந்ததால் அவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நோயாளிகள் காக்கப்பட வேண்டும்! மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு!
நேற்று காலை வரை சிகிச்சை பெற்ற 75 பேரில் மூவர் உயிரிழந்தனர். பூர்ணிமா ஜூங்கா (18), கீதா ஜூவாங்கா (24), சபினி (22) ஆகியோர் முதலில் உயிரிழந்தனர். பின்னர் பாப்பவதி ஜூங்கா (19), புலோமினி, சீதா (23) உள்ளிட்டோரும் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இன்று காலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஞ்சிலா சுரின் (26) என்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 60 தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமோனியா போன்ற ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், வழக்கமான பராமரிப்பு, அவசரகால எச்சரிக்கை அமைப்புகள் ஆகியவை அவசியம் என்பதை இந்த விபத்து நினைவூட்டுகிறது. மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நொடிப்பொழுதில் தப்பிய சிறுமி உயிர்... அரசு மருத்துவமனையில் நடக்கவிருந்த பயங்கரம்... திடுக்கிட வைத்த அலட்சியம்...!