இது 19வது முறை..! அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை தீவிரம்..!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்திற்கு இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு அரசு சார்ந்த அலுவலகங்களுக்கும், பொது இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காவல்துறை விழிப்புடன் செயலாற்றி வருகிறது. சைபர் கிரைம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிரபலமான பல்கலைக்கழகமான கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று ஏற்கனவே 18 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 19வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் அச்சுறுத்தல்.. முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஹை அலர்ட்டில் போலீசார்..!
எப்போதும் போல, இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் சோதனை செய்ததில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மின்னணு சாதனங்கள் மூலம் வதந்தியை பரப்புதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில் மர்ம நபர் டார்க் நெட்டை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதனால், இந்த மிரட்டல் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையொட்டி, போலீசார், மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்தமையத்தின் உதவியை கோரி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், சைபர் கமண்டோக்களை கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
இதற்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும், புதுச்சேரியில் முதலமைச்சர் வீடு உட்பட 8 இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை சாலையில் காந்தி திடல் அருகே உள்ள புரோமனேட் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பெர்கமாண்ட் ஹோட்டல், மற்றும் காந்தி வீதியில் உள்ள செண்பகா ஹோட்டல், இந்திரா காந்தி சிக்னல் அருகே உள்ள காரை உணவகம், புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில் இரண்டு தனியார் ஹோட்டல்களில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் ஆய்வில் இது புரளி என பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பதில் போட்டி.. சரமாரியாக வெட்டிக்கொலை.. நண்பனின் கதையை முடித்த மூவர்..!