பாஜகவுக்கு பை பை சொன்னார் அண்ணாமலை! தனிக்கட்சி விவகாரம்! 12 மணிக்கு வெளியாகும் அதிரடி அறிவிப்பு!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக, தன் அதிகாரப்பூர்வ முடிவை, இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிக்க உள்ளார்.
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று மதியம் 12 மணிக்கு தனது முக்கிய அரசியல் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகிய பிறகு, அவர் கட்சிக்குள் தேசிய அளவிலான பொறுப்பு அல்லது மத்திய அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அத்தகைய முக்கிய பொறுப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் தனித்த அடையாளத்தை உருவாக்கி ஆட்சியை பிடித்தது, பல அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் பின்னணியில், தமிழக அரசியலில் தனித்த பாதையை உருவாக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!
சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைமை நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது தனது எதிர்கால அரசியல் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் நேரடியாக உரையாட உள்ளதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது கருத்துக்களையும் எதிர்கால திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவாரா, அல்லது வேறு அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்விகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவரது அறிவிப்பு வெளியாகும் வரை அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!