ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி... முதல்வர் விஜய்க்கு பொற்கொடி நன்றி!
உச்சநீதிமன்றத்திலான மேல்முறையீட்டை வாபஸ் பெற்று சமத்துவத்தலைவரின் கொலை வழக்கை CBI விசாரிக்க வழிவகுத்த தமிழக முதல்வருக்கு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தனது கணவரும் சமத்துவத்தலைவர் என அழைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற வழிவகுத்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு காரணமாக, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீண்ட காலமாக தாமதமானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களாக முன்னேற்றமின்றி இருந்த வழக்கில், தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிபிஐ விசாரணை நடைபெறுவதற்கு தற்போது வழிவகை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதன் மூலம், வழக்கு சிபிஐ விசாரணைக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளதாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். இதற்காக முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அவர், இதை தங்களது நீண்டகால சட்டப் போராட்டத்தின் முதல் முக்கிய வெற்றியாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!
மேலும், தனது கணவர் கொலை செய்யப்பட்ட நாள் முதல் சிபிஐ விசாரணை கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதில் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றம் வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இனி சிபிஐ விசாரணை எப்போது தொடங்கும், அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! முதல் பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்?!