"மரியே வாழ்க"..! பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்..!!
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் கொடியேற்றம் தொடங்கியது.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 54வது ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்ற பவனியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. சின்ன வேளாங்கண்ணி என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்தப் புனிதத் திருத்தலம், எலியட்ஸ் கடற்கரை அருகே அமைந்திருப்பதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பெருவிழா, அன்னை மரியாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ஆரோக்கிய மாதாவின் அருளை வேண்டும் நம்பிக்கையையும் ஒன்றிணைக்கிறது.
மாலை நேரத்தில் தேவாலய வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கைகளை உயர்த்தி ‘மரியே வாழ்க’ என்று ஒரே குரலில் முழக்கம் செய்தனர். அந்த முழக்கம் கடல் காற்றோடு கலந்து சுற்றுப்புறம் முழுவதும் எதிரொலித்தது. 75 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீளமுள்ள திருக்கொடி ஏற்றப்பட்டபோது, கூட்டம் மகிழ்ச்சியில் திளைத்தது. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நற்கருணை தேர் ஊர்வலம் தொடங்கியது.
தேர் பெசன்ட் நகரின் 6வது அவென்யூ கடற்கரைச் சாலை, 3வது பிரதான சாலை, 2வது அவென்யூ மற்றும் 7வது அவென்யூ வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பக்தர்கள் வரிசையாக நடந்து சென்று அன்னையின் அருளை வேண்டினர். மெழுகுவர்த்திகள், மலர் மாலைகள் மற்றும் பூக்களுடன் பலர் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.இந்தத் திருத்தலம் பல ஆண்டுகளுக்கு முன் உருவானதிலிருந்து ஆண்டுதோறும் இதே நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குவது வழக்கம். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து அன்னையிடம் தங்கள் வேண்டுதல்களை வைக்கின்றனர். நோய் நீங்க, குடும்ப நலம் பெற, கல்வி மற்றும் தொழிலில் வெற்றி பெற என பலவிதமான பிரார்த்தனைகளுடன் வருபவர்கள் அதிகம். ஆலய வளாகமும் சுற்றுப்புறச் சாலைகளும் இன்று பக்தர்களால் நிரம்பி வழிந்தன. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் ஒரே உணர்வோடு பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!
கொடியேற்றத்திற்குப் பிறகு சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை மற்றும் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்தத் திருப்பலியில் பக்தர்கள் அமைதியாகப் பங்கேற்று ஜெபம் செய்தனர். திருவிழா நாட்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்புத் திருப்பலிகள், நவநாள் ஜெபங்கள், ஜெபமாலை மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. வெவ்வேறு நாள்களில் நலம் பெறும் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, இளையோர் விழா, உழைப்பாளர் விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 7ஆம் தேதி மாலை பெரிய தேர் பவனி நடைபெறும். அன்று ஆலயத்திலிருந்து புறப்படும் தேர் சுற்றுப்புறச் சாலைகளில் ஊர்வலமாகச் செல்லும். செப்டம்பர் 8ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
இதையும் படிங்க: தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!