பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்..!! சென்னையில் செத்துமடியும் காகங்கள்..!! தமிழக அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு..!!
பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்சா - H5N1) தொற்று குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை தமிழக அரசு தணிக்க முயன்று வருகிறது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு தரப்பில் தேவையற்ற பீதி வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!
இதையடுத்து, காஞ்சிபுரம் கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழு, இறந்த காகங்களின் மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு (ICAR-NIHSAD) அனுப்பியது. சோதனை முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகின. அதில், அடையார் பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு H5N1 வகை பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, கோழிகள் மற்றும் வீட்டுப் பறவைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரிதான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பறவைகள் மூலம் மனிதர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. பாதிப்பு உறுதியான பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் பீகாரில் ஏற்கனவே இதேபோன்ற காக இறப்புகள் பதிவாகி, H5N1 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு ஏற்கனவே தொடங்கியிருந்தது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் இதுவரை எந்த மனிதருக்கும் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்ட அளவில் தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
- பறவைக்காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்; வதந்திகளை நம்பாதீர்கள்.
- எங்கேனும் காகங்கள் அல்லது பிற பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தால், உடனடியாக அருகிலுள்ள கால்நடைத் துறை அலுவலகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.
- காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறவும்.
- கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை அதிக வெப்பநிலையில் நன்கு வேகவைத்த பின்னரே உட்கொள்ளவும். ஹாஃப்-பாயில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- சந்தேகங்கள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தொற்றை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!