பச்சையப்பாஸ் மாணவர்கள் மீது வெறியாட்டம்..! சென்ட்ரல் மெட்ரோவில் பரபரப்பு..! நயினார் சரமாரி விமர்சனம்..!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் அருகே அரங்கேறிய பட்டாக்கத்தி வெறியாட்டம் தவெக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே என்ற கேள்வியை எழுப்புவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்களை தடுக்க தவறினால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பட்டப்பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது 15 பேர் கொண்ட போதை கும்பல் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டி வெறியாட்டம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகம் கூடும் சென்னை மாநகரின் மையப்பகுதியிலேயே அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதலால், மக்கள் தங்களின் உயிருக்கு அஞ்சி அலறியடித்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்று சாடினார்
மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தையும் வன்முறையையும் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக வெற்றி கழக அரசின் நிர்வாகத் தோல்வியே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள அந்த 15 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: “எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது”... மண் கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல்... தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்...!
கல்லூரி வளாகங்கள், ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் நிரந்தரப் பாதுகாப்பு அளிப்பதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில், தவெக அரசுக்கு எதிராகப் பா.ஜ.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மது..! வீடியோவால் சிக்கிய ஊழியர். அதிரடி சஸ்பெண்ட்..!!