சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!
மாநிலத் தலைவருக்கு ஆதரவாக சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேசியத் தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநிலத் தலைவருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை ஆதரித்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு. நிதின் நபின் இன்று சாத்தூரில் பிரம்மாண்டமான ரோட் ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்.
சாத்தூர் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த ரோடு ஷோ, டி.எம்.பி (TMB) வங்கி முன்பாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் நயினார் நாகேந்திரனுடன் நின்றவாறு நிதின் நபின் பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்தார். அங்கிருந்து முக்குராந்தல் சந்திப்பு வரை மெயின் ரோட்டில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகனப் பேரணி நடைபெற்றது.
சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத் மாதா கி ஜே மற்றும் தாமரை மலரட்டும் போன்ற முழக்கங்களை எழுப்பினர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களைத் தூவியும் தேசியத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்கச் சாத்தூர் நகரமே காவி மயமாகக் காட்சியளித்தது.
இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!
பேரணியின் இடையே உரையாற்றிய நிதின் நபின் தமிழகத்தில் நிலவும் ஊழல் ஆட்சியை அகற்றி, தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தைக் கொடுக்க பாஜகவால் மட்டுமே முடியும். நயினார் நாகேந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் சட்டமன்றத்திற்குச் செல்வது சாத்தூர் தொகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நேரடியாகத் தமிழக மக்களுக்குக் கிடைக்கத் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
தனக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மக்களிடையே பேசிய நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதையே தனது முதல் கடமையாகக் கொள்வேன் என உறுதி அளித்தார். தேசியத் தலைவரின் இந்த நேரடி வருகையும், பிரம்மாண்டமான ரோடு ஷோவும் சாத்தூர் தொகுதியில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் என அக்கட்சியினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக வென்றால் 6 மாதத்தில் ஆட்சியை கலைப்பார்கள்! பாஜகவின் 'புது ஆட்டம்' குறித்து திருமாவளவன் எச்சரிக்கை!