×
 

அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

சட்டமன்ற தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகள் இடையே கடுமையான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இப்பட்டியலில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சாத்தூர் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தொகுதியில் எல். முருகன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர். காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க: NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

எனினும், இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், பாஜக மற்றும் பிற என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்ணாமலைக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:“சட்டமன்றத் தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். இளம் தலைவர்களும் உள்ளனர். சரியான நபர்களுக்கு ஏற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படவில்லை. யாரும் புறக்கணிக்கப்படவில்லை. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பாஜக தலைமையிடமே உள்ளது. கட்சியில் எந்தவித பாரபட்சமும் இல்லை” என்றார்.

இந்த விளக்கத்தின் மூலம், பாஜகவுக்குள் எந்தவித உட்கட்சி மோதலும் இல்லை என்பதை தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், அண்ணாமலை தனது பங்கை ஒரு சாதாரணக் கட்சித் தொண்டனாகவே தொடர்ந்து ஆற்றுவதாக அறிவித்துள்ளதால், என்டிஏ கூட்டணியின் வெற்றிக்காக அவர் முழு பலத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது, அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தலில், நான்கு முனைப் போட்டியால் முடிவுகள் எப்படி அமையும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share