அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இதன் காரணமாக காவல்துறை விழிப்புடன் செயலாற்றி வருகிறது. சைபர் கிரைம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை சேப்பாக்கம் மைதானம், புதுச்சேரியில் முதலமைச்சர் வீடு உட்பட 8 இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை சாலையில் காந்தி திடல் அருகே உள்ள புரோமனேட் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பெர்கமாண்ட் ஹோட்டல், மற்றும் காந்தி வீதியில் உள்ள செண்பகா ஹோட்டல், இந்திரா காந்தி சிக்னல் அருகே உள்ள காரை உணவகம், புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில் இரண்டு தனியார் ஹோட்டல்களில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க ஸ்டாலின்! முதலமைச்சர் போட்ட ட்வீட்.. மொத்தமாய் முடித்து வைத்த இபிஎஸ்..!
இதுகுறித்த புகாரின்பேரில், மின்னணு சாதனங்கள் மூலம் வதந்தியை பரப்புதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில் மர்ம நபர் டார்க் நெட்டை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதனால், இந்த மிரட்டல் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையொட்டி, போலீசார், மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்தமையத்தின் உதவியை கோரி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், சைபர் கமண்டோக்களை கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
மேலும் கடந்த மே மாதம் 25ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆர்.டி.எக்ஸ். குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மோப்பநாய் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். சோதனையில், வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?