×
 

சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸினால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அதிரடிச் சோதனயில் ஈடுபட்டனர். 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று மாலை கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் ஒன் (A3) வருகைப் பகுதியில், பயணிகள் வெளியேறும் கேட் அருகே சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாகக் கேட்பாரற்றுக் கிடந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலமுறை கேட்டும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை.

அதே சமயம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர் வெளியே வரவிருந்த அதே பகுதியில் இந்தச் சூட்கேஸ் இருந்ததால், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

உடனடியாக அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அந்தச் சூட்கேஸைத் தீவிரமாகச் சோதித்தனர்.

நீண்ட நேரச் சோதனைக்குப் பிறகு, அந்தச் சூட்கேஸில் வெடிபொருட்களோ அல்லது மர்மப் பொருட்களோ ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ பயணி தவறுதலாக விட்டுச் சென்றது தெரியவந்ததையடுத்து, பயணிகள் நிம்மதியடைந்தனர். மீட்கப்பட்ட அந்தச் சூட்கேஸை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அதன் உரிமையாளரைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share