சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!
சென்னையை அடுத்த நாவலூரில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 7 வயது சிறுவன் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வெடிப்பு விபத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தின் தாக்கம் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
நாவலூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் எரிவாயு கசிவு காரணமாகச் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தூக்கத்தில் இருந்த மக்கள் தப்பிக்கும் முன்பே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி 3 வயது மற்றும் 5 வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தனியார் கால்நடை கல்லூரிகள் வேண்டாம் சென்னையில் மாணவர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்!
7 வயது சிறுவன் உட்பட மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் (KMCH) உள்ள தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டர் வெடித்த வேகத்தில் விபத்து நடந்த வீடு மட்டுமின்றி, அதற்கு அருகிலிருந்த 2 வீடுகளும் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவுதான் விபத்திற்குக் காரணமா அல்லது சிலிண்டரின் தரம் குறைவாக இருந்ததா என்பது குறித்து நாவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இத்தகைய விபத்துக்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!