கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!
கடலூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் youtube பார்த்து வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது அம்பலம்; சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் (31). கார் ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை காலை ரங்கா ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனது நண்பர் ராஜாவின் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி சசிகுமார் மற்றும் ராஜா மீது தாக்குதல் நடத்திய போது. இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
ராஜா வீடுகள் வழியாக தப்பிச் சென்று ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சசிகுமார் வயல்வெளி வழியாக தப்பிச் சென்ற நிலையில், அவரை விரட்டிச் சென்ற கும்பல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஏழுமலை, அவரது மகன் பெருமாள் உள்ளிட்ட 5 பேர் மீது ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில், ராஜாவுக்கும் சசிகுமாருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ரங்கா ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட சிலருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!
மேலும், ஏழுமலையின் மகன் பெருமாளை சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கியதாகவும், இந்தச் சம்பவத்துக்கு ராஜாவும் சசிகுமாரும் காரணம் என ஏழுமலை தரப்பினர் கருதி வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுதவிர, பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருடன் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பாக ரங்கா ரெட்டிப்பாளையம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், கொலைச் சம்பவத்தில் 8 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ரங்கா ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை (47), அவரது மகன் பெருமாள் (19), சின்னத்துரை (45), புதுச்சேரியைச் சேர்ந்த சிறுவன், வின்சன்ட்ராஜ் (24), துளசிமணி (19), அரவிந்த் என்ற விக்ரம் (20), ஜெயமூர்த்தி என்ற கபாலி (29) ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுவன் youtube பார்த்து இவர்களுக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வெடிகுண்டுகள் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கூடையில் வைத்து கீரை கட்டுகள் மற்றும் கலர் கோல மாவுகளை வைத்து பாதுகாப்பாக சம்பவ இடத்திற்கு எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறத.
இதையும் படிங்க: நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!