×
 

"அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக  கண்டனம்!

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்குக் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (சூலை 20, 2026) தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கொடூரமான முறையில் தடியடி நடத்திய சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில், மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறைகள் மிகக் கடுமையாகச் சாடப்பட்டுள்ளன.


நீட் தேர்வு உள்படப் பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த குளறுபடிகளுக்கும், வினாத்தாள் கசிவுக்கும் முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஒரு மாதக் காலமாகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் செல்ல முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மத்திய அரசு தனது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. காவல்துறை மூலம் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும்.

இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

தலைநகர் டெல்லியில் ஒட்டுமொத்த இளைஞர்களின் எழுச்சியாக இது மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ள சூழலில், இப்போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது, போராட்டக் களத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவைகளை முடக்கியது மற்றும் தடையை மீறி இளைஞர்கள் குவிவதைத் தடுக்க டெல்லியின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது ஆகிய செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் உரிமைப் போராட்டத்தை முடக்க மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், தங்களது எதிர்காலக் கல்வி உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் இளைஞர்களை இதுபோன்ற எந்தவொரு அடக்குமுறையாலும் என்றும் ஒடுக்கிவிட முடியாது என்று திமுக தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கல்விக்காகவும், தங்களது வாழ்வாதாரத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிறவர்களின் இந்த நியாயமான உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! இந்திய மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய நீட் தேர்வு இந்திய மண்ணில் இருந்து அறவே ஒழியட்டும்! என்று திமுக தனது கண்டன அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share