அண்ணா பல்கலை. வழக்கின் இடியாப்ப சிக்கல்.. அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி வழக்கு..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றவாளி ஞானசேகரன் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பல பேருக்கு தொடர்பு இருப்பதாக அண்ணாமலை பகிர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த அண்ணாமலை, ஞானசேகரன் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசி இருந்ததாகவும், திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசியதாகவும், ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நடராஜன் உடனும் கோட்டூர் சண்முகம் பேசியிருக்கிறார் எனவும் செல்போன் அழைப்பு ஆதாரங்களை வைத்து பேசினார். தன்னிடம் செல்போன் அழைப்பில் பேசிய ஆதாரங்களும் இருப்பதாக அண்ணாமலை கூறினார். தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்ததோடு ஆடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறும் அண்ணாமலை இடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான தொலைபேசி உரையாடல் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையை விசாரிக்குமாறு புலனாய்வு குழுவிற்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் வழக்கு தொடர்ந்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!