அமைச்சர் கே.என். நேரு ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!
தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீதான முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு தொடர்பான முறைகேடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீதான வேலைக்கு லஞ்சம் மற்றும் டெண்டர் முறைகேடு புகார்கள் தற்போது உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் அமைச்சர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்தவொரு இடைக்கால உத்தரவோ அல்லது தடையோ விதிக்கக் கூடாது என வலியுறுத்தி அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான இ.எஸ். இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் 'கேவியட்' (Caveat) மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் சுமார் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்பியதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை (ED) வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20- அன்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: விஜய்க்கு வலுக்கும் ஆதரவு.... தவெக-வுக்கு எம்ஜிஆர் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு!
சுமார் ₹888 கோடி முதல் ₹1,020 கோடி வரை இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறையின் 232 பக்க Dossier தெரிவிக்கிறது. ஒரு பணிக்கு ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாவதற்கு முன்பே வாட்ஸ்அப் மூலம் தேர்வுப் பட்டியல் கசிந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் கே.என். நேரு அல்லது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் முறையீடு செய்து, FIR பதிவு செய்வதற்கும் விசாரணைக்கும் இடைக்காலத் தடை கோரினால், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் கொண்டு சென்ற மனுதாரர் என்ற முறையில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் என இன்பதுரை எம்.பி. இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை (Preliminary Enquiry) என்ற பெயரில் மாநில அரசு காலத்தை விரயம் செய்யக் கூடாது" என ஏற்கனவே உயர்நீதிமன்றம் கண்டித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை திமுக தரப்பிற்குச் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் புகார் விவகாரம், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!