மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!
சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மழைக்கால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய தன்னார்வலர் பதிவு செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி செப்டம்பர் முதல் வாரத்தில் அல்லது அதற்கு அடுத்த வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள சூழ்நிலைகளில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை தன்னார்வலர்களை முறையாக பதிவு செய்து, அவர்களின் திறமை மற்றும் வசிக்கும் பகுதியை கருத்தில் கொண்டு பணிகளை ஒதுக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் செயலியில் தங்களது பெயர், வயது, தொடர்பு விவரங்கள், வசிக்கும் மண்டலம் மற்றும் முந்தைய மீட்பு அல்லது சமூக சேவை அனுபவம் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம்.
இதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் தேவையான இடங்களுக்கு அருகில் உள்ள தன்னார்வலர்களை உடனடியாக அடையாளம் காண முடியும்.இந்த செயலியின் மூலம் தன்னார்வலர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, நிவாரண மையங்களில் உதவுவது, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது, மரங்கள் விழுந்திருக்கும் இடங்களை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடலாம். மேலும், பல்வேறு அரசு சாரா அமைப்புகள் மற்றும் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்களையும் ஒரே தளத்தில் இணைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!
தேவைப்படும் நபர்கள் செயலி மூலம் உதவி கோரிக்கைகளை எழுப்பலாம். அதற்கு அருகில் உள்ள தன்னார்வலர்கள் அல்லது குழுக்கள் உடனடியாக செயல்பட முடியும்.மாநகராட்சி ஏற்கனவே 215 வெள்ள நிவாரண மையங்களையும் 111 சமுதாய சமையலறைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் படகுகள், மோட்டார் பம்புகள் மற்றும் பிற அவசர உபகரணங்களும் தயாராக உள்ளன. இந்த அமைப்புகளுடன் தன்னார்வலர்களை இணைப்பதன் மூலம் மீட்பு பணிகள் மேலும் திறம்பட நடைபெறும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!