சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் வட்டமடித்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தாம்பரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகலில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், திரிசூலம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும், அங்கிருந்து புறப்படுவதிலும் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான், டெல்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய விமானங்களின் சேவைகளும் தாமதமாகி உள்ளன.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!
இதற்கிடையே, புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர், சென்னை விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தாம்பரம் இந்திய விமானப்படைத் தளத்திற்குத் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து சாலை மார்க்கமாகக் கார் மூலம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடையும் அமித்ஷா, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது டெல்லி பயணம் ஓரிரு மணி நேரம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!