108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் 12 மணி நேர பணியை 8 மணி நேரமாகக் குறைக்க சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அவசர கால மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம், தற்போது தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 1,353 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற அடிப்படையில் இரண்டு ஷிப்ட்கள் நடைமுறையில் இருந்தன. இந்த வேலைப் பளுவை குறைக்கக் கோரி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இந்த விவகாரம் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்திற்குச் சென்றது.
தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் பி.முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், பணியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 12 மணி நேரத் தொடர் பணியால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கும், உடல்நலக் குறைவுக்கும் ஆளாகின்றனர். இது தூக்கமின்மை காரணமாகச் சில நேரங்களில் விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த நடைமுறை தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த இ.எம்.ஆர்.ஐ. - ஜி.ஹெச்.எஸ். (EMRI - GHS) நிறுவனம், இது லாப நோக்கமற்ற சேவை என்றும், நாடு முழுவதும் 12 மணி நேரப் பணி நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தது.
இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளைச் சுட்டிக்காட்டினார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என்பது உலகளாவிய விதிமுறை என்பதை உறுதிப்படுத்திய தீர்ப்பாயம், சட்டவிரோதமான 12 மணி நேரப் பணியை உடனடியாக 8 மணி நேரமாகக் குறைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு அரசாணையாக வெளியான 30 நாட்களில் புதிய 8 மணி நேரப் பணி முறை அமலுக்கு வரும். புதிய நடைமுறை அமலுக்கு வரும் வரை, 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கூடுதல் 4 மணி நேரத்திற்கான ஊதியத்தை (OT) கட்டாயம் வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இந்தத் தீர்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!