×
 

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னையில் இரண்டு நாட்கள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 26) தொடங்கிய இந்த ஆய்வுப் பயணத்தில், முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக சந்திப்புகள் நடைபெற்றன. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற மாநிலக் கட்சிகளும், இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் பங்கேற்றன.

என்.ஆர். இளங்கோ (திமுக), ஜெயக்குமார், ஆர்.எஸ். பாரதி, இன்பதுரை (அதிமுக), ரவிக்குமார் (விசிக), தங்கபாலு (காங்கிரஸ்), கராத்தே தியாகராஜன் (பாஜக), ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட்), சீமான் (நாம் தமிழர்) உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பெரும்பாலான கட்சிகள் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தின. 

இதையும் படிங்க: நெருங்கும் சட்டசபை தேர்தல்..!! தலைமை தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் விசிட்..!!

இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும், பணபலம் மற்றும் இலவச வழங்கல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை நிர்ணயிப்பதாக உறுதி அளித்தார். மேலும், தேர்தல் ஆணையம் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்), ஐஜிகள், டிஐஜிகள், அமலாக்க அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நோடல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பராமரிப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள், தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி, பறிமுதல் நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, வாக்காளர் விழிப்புணர்வு போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டன. அதிகாரிகள் பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கடுமையான அறிவுறுத்தல் வழங்கினார். இக்கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது.

இன்று (பிப்ரவரி 27) இரண்டாவது நாளாக தொடர்ந்த ஆலோசனையின்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் சிறப்பான பணியைப் பாராட்டிய அவர், தமிழ்நாடு சிறப்பான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம் எனக் குறிப்பிட்டார். மேலும், தேர்தலை வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் கண்காணிக்கப்படுவர். தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம். SIR பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தமிழ்நாடு நினைவில் வைத்துக்கொள்ளும். தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் உள்ளனர். வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.  படிவம் 6 மூலமாக இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.

தொடர்ந்து மதியம் வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், சுங்கத்துறை, வங்கி அதிகாரிகள், தபால் துறை உள்ளிட்ட 23 தேர்தல் தொடர்பான விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் மேலும் ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இத்தகைய ஆலோசனைகளைத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை முடிவடைந்த பின்னரே தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share