வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!
வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கும் செயல்களில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறிய அவர், அதன் அடிப்படையில் உரிமையோடு மக்களிடம் வாக்கு கேட்டார்.
ராமேசுவரம் கோயில், பிரசித்தி பெற்ற குண்டு மிளகாய், பசுமையான குளங்கள் ஆகியவை இம்மாவட்டத்தின் தனிச்சிறப்புகள் என்று அவர் சுட்டிக்காட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரனார், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் போன்ற பெருமக்களை தந்த மண் இது என்று பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின், சாதி-மத வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் ராமநாதபுரம் என்று வலியுறுத்தினார்.
“ராமநாதபுரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாரா? திராவிட மாடல் 2.0-க்கு தயாரா?” என்று கேள்வி எழுப்பிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் கூட கிடைக்காத நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார். அப்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.07 சதவீதமாக சரிந்திருந்தது; நிதி நிலை படு பாதாளத்தில் இருந்தது. ஆனால், திறமையான நிர்வாகத்தின் மூலம் மக்களை முதலில் கொரோனாவிலிருந்து மீட்டெடுத்து, பின்னர் நிதி நிலையை சீரமைத்ததாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
இது சாதாரணமாக நடக்கவில்லை; அமைச்சர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கடுமையாக உழைத்து அரசு இயந்திரத்தை முழு திறனுடன் செயல்பட வைத்ததன் விளைவே இது என்று விளக்கினார். “இந்த வளர்ச்சி நமக்குப் போதாது. உலக அளவில் தனிப்பெரும் பிராண்டாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்” என்று லட்சியத்தை முன்வைத்த ஸ்டாலின், கடந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்தார். இம்முறை 100 சதவீத வெற்றியை அளிப்பீர்களா? என்று உற்சாகமாகக் கேட்டார்.
திராவிட மாடல் ஆட்சியின் கீழ் ரூ.3,250 கோடி மதிப்பிலான 46,710 வளர்ச்சித் திட்டப் பணிகள் ராமநாதபுரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாஜகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், “தமிழ்நாடு மீது பாஜகவுக்கு உண்மையான அக்கறை இல்லை; அது வெறும் அரசியல் ஸ்டண்ட் மட்டுமே” என்றார். இரட்டை வேடம் போடும் பாஜக, தெற்கை வழிநடத்தும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார்.
மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயல்வதை ஜனநாயக சக்திகள் அனைத்தும் எதிர்க்கும் என்று அறிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியால் இதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? என்று சாடினார். பாஜகவின் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் பழனிசாமி மௌனம் காக்கிறார்; மோடி, அமித் ஷா போன்றோருக்கு எதிராகப் பேச வேண்டியிருந்தால் ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகிவிடுகிறார் என்று கிண்டல் செய்தார்.
“இப்படிப்பட்ட அடிமைத்தனம் உலகில் வேறு எங்கும் இல்லை” என்று விமர்சித்த ஸ்டாலின், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற பாஜகவின் அறிவிப்பு, தமிழ்நாட்டின் பன்முகத்தன்மைக்கு நேரடி சவால் என்று எச்சரித்தார். இந்த சவாலை தமிழ்நாட்டில் விட முடியாது; திராவிட பெருஞ்சுவர் தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் என்று உறுதியளித்தார். “நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காகவும், இந்திய அரசமைப்பு, மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவும்தான்” என்று முடித்தார்.
இதையும் படிங்க: உதிப்பது உதயசூரியன்தான்.. திராவிட மாடல் ஆட்சிக்கு எங்கும் ஆதரவு அலை..!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!!