மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
மெட்ரோ ரயிலில் பயணித்து மக்களிடையே வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து திருச்சியில் முடித்தார். இரண்டாம் கட்டமாக நெல்லைப் பகுதியிலும், மூன்றாம் கட்டமாக கடந்த 6-ஆம் தேதி புதுச்சேரியிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரசாரப் பயணங்களின்போது, திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தை விளக்கி, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதலமைச்சர். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை உள்ளடக்கிய இந்த கட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதிப்பது உதயசூரியன்தான்.. திராவிட மாடல் ஆட்சிக்கு எங்கும் ஆதரவு அலை..!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!!
இதற்கிடையில், சென்னையில் ஒரு சிறப்பான நிகழ்வு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு, அவர்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார். சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோவில் பயணித்த அவர், பயணிகளுடன் உரையாடினார்.
பயணத்தின்போது, பல பொதுமக்கள் திமுக ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களை நினைவுகூர்ந்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக, இலவச பேருந்து பயணம், மருத்துவ வசதிகள், கல்வி உதவிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு அளிக்குமாறு மெட்ரோ பயணிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மெட்ரோ ரயிலில் நடைபெற்ற இந்த அனுபவம், பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஆர்வத்துடன் முதலமைச்சருடன் உரையாடி, செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு, அரசியல் தலைவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது.
தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகிறார். தஞ்சாவூர் பிரசாரத்துடன் அவரது பிரசாரப் பயணம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பக்கா மாஸ்...!! - விடிந்ததுமே ஃபுல் எனர்ஜியோடு திருவண்ணாமலையில் களமிறங்கிய ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பு..!