மாதம் ரூ.2,000 உதவித்தொகை... அன்புக்கரங்கள் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்...!
மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அவர்களது 18 வயது வரை 'அன்புகரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவதை அறிந்து அக்குழந்தைகளை தொடர்ந்து அரவணைத்து பாதுகாத்திடும் பொருட்டு அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திரம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்.. செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும்?
ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றவர் குழந்தையை கைவிட்டு சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றவர் மாற்றுத்திறன் கொண்டவராக இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொருவர் சிறையில் இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பின்) இது போன்ற பாதிப்புகளை உடைய குழந்தைகள் அன்புகரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அந்தந்த மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், கலெக்டர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பம் செய்பவர்கள் ரேஷன் கார்டு நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், குழந்தையின் வயது சான்று நகல்( பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), தாய் தந்தை இறப்பு சான்றிதழ், குழந்தையின் வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு விலக்கு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!