ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மிகுந்த ஏமாற்றமளிப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், மாநிலத்தின் நலன்களை மத்திய பாஜக அரசு கருத்தில் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை முற்றிலும் பொய்க்கச் செய்து, மாநிலத்தை மீண்டும் புறக்கணித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இந்த அறிக்கையில், ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான முக்கிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நலன்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். மாநிலங்களுக்கான வரி பகிர்வு முறையில் நீண்டகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது. பல மாநிலங்கள் ஒன்றாகக் கோரியபடி, மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இம்முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 கோவில் குடமுழுக்குகள்..!! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!
16ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின்படி, வரி பகிர்வு தொடர்ந்து 41 சதவீதமாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பு செய்து வரும் நிலையில், அதற்கான வரி பகிர்வு சதவீதம் மற்ற ஒப்பிடத்தக்க மாநிலங்களைவிட குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கான பங்கு வெறும் 4.097 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தொடரும் இந்த புறக்கணிப்பு, 16ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது கவலை அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பால் மாநில வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கான மத்திய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு தமிழ்நாடு கோரிய 3,112 கோடி ரூபாய் நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது திட்டத்தை முழுமையாக முடக்கும் முயற்சியாகத் தெரிவதாக ஸ்டாலின் விமர்சித்தார்.
அதேபோல், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 19 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது 11 ஆயிரம் கோடியாகவும், ஊரக வீட்டு வசதித் திட்டத்திற்கு 35,832 கோடியிலிருந்து 32,500 கோடியாகவும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஏமாற்றமாக, PM Internship Scheme-க்கு சென்ற ஆண்டு 10,831 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025-26 திருத்திய மதிப்பீட்டில் வெறும் 526 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது திட்டம் பெரும் தோல்வியடைந்துவிட்டதை உறுதிப்படுத்துவதாக ஸ்டாலின் கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய் நிலுவை, ஜல்ஜீவன் திட்டத்திற்கான நிலுவை ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி தடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை இந்த நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
வழக்கமாக நிதி அமைச்சரின் உரையில் இடம்பெறும் திருக்குறள் இம்முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டுக்கான எந்த முக்கிய திட்டமும் இல்லாத இந்த அறிக்கை முழுமையான ஏமாற்றமாக அமைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மொத்தத்தில், “ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!” என்று அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூரில் சீறப்போகும் காளைகள்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் தீவிரம்!