நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கிராமப்புறக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் நிதி தாமதமாவது பணிகளைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹3,112 கோடி ஆகும். இதனை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் ₹2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், இதுவரை ₹732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 2024 முதல் எந்த நிதியும் வரவில்லை. இருப்பினும், திட்டப் பணிகள் தொய்வின்றி நடக்கத் தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து ₹2,550 கோடியை முன்கூட்டியே விடுவித்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!
ஒகேனக்கல் இரண்டாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு (Hogenekkal Phase-II) ஜல் ஜீவன் 2.0-ன் கீழ் நிதி உதவி மற்றும் ஜைக்கா (JICA) கடன் ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில், இதுவரை 1.12 கோடி (90%) வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுப் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திண்டுக்கல், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ₹7,590 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தவும் பிரதமரின் அனுமதியை அவர் கோரியுள்ளார்.
குடிநீர் வழங்குவதில் அரசியல் பாரபட்சம் காட்டாமல், தமிழக மக்களின் நலன் கருதி நிதி விடுவிப்பில் பிரதமர் தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!