×
 

ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆகஸ்ட் 6 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் இன்று (ஆகஸ்ட் 6) முதல் முறைப்படி தொடங்கியுள்ளன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மறைந்துள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் பரிசுத் தொகைகளும் வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விளையாட்டுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் களம் காணவுள்ளன. போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் SDAT அதிகாரப்பூர்வ போர்ட்டலான tncmtrophy.sdat.in இணையதளத்தின் வாயிலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.  

கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர்விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் என புதிதாக 8 பிரிவுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் (19 வயதிற்குட்பட்டோர்), கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இதையும் படிங்க: "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

பரிசுத் தொகையைப் பொறுத்தவரை, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அதேவேளையில், மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் தங்கம் வெல்லும் சாம்பியன்களுக்கு ரூ.1 லட்சமும், வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.75,000-மும், வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.50,000-மும் ரொக்கப் பரிசாக அள்ளிக் கொடுக்கப்படவுள்ளது. குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நபருக்குத் தலா ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 வீதம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.  

தனிநபராகவோ அல்லது தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ முதலமைச்சர் கோப்பைக்கான பதிவு இணையதளத்தில் விளையாட்டாளர்கள் உடனே தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகங்களையோ அல்லது 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தின் 9514000777 என்ற எண்ணையோ அனைத்து வேலைநாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share