×
 

விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்தாலும் ஏழை மக்களுக்கான பட்ஜெட்டை உருவாக்க முடியாது என கரூர் கூட்டத்தில் சிபிஐ வீரபாண்டியன் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்தாலும், ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சிறந்த பட்ஜெட்டை உருவாக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க மக்களைச் சந்திப்போம் என்ற முழக்கத்துடன் நடைபயணப் பரப்புரை இயக்கப் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தைப் பகுதியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மு. வீரபாண்டியன், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

நாட்டின் பெரும்பாலான இயற்கை வளங்களும் செல்வங்களும் தனியார் வசம் சென்று குவிந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான பட்ஜெட்டை எப்படி உருவாக்க முடியும்? அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் ஒரு பகுதியை நாட்டின் வளர்ச்சிக்காக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தவெக தலைவரால் சட்டம் இயற்ற முடியுமா?

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வரும் நாளில்தான் இதுபோன்ற துணிச்சலான பொருளாதார முடிவுகளை எடுக்க முடியும். அதுவரை இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து வருகிறார்கள், எனத் தெரிவித்தார்.


ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்தை முன்வைத்து, கிராமங்கள் மற்றும் நகரங்களில் நடைபயண இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகச் செப்டம்பர் 1-ஆம் தேதி நாட்டின் தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது. இப் பேரணியில் பங்கேற்கத் தமிழக டெல்டா பகுதியிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

வேலை இல்லாத காலங்களில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; பொது விநியோக முறையைச் (PDS) சீர்படுத்தி உணவுப் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும்; போராடிப் பெற்ற உழைப்பாளி மக்களின் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும்.

உலகில் தலைசிறந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பெற்றிருக்கிறோம். இப்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே போதுமானது. ஒன்றிய அரசு தங்கள் அதிகாரத்தைக் குவித்துக்கொள்வதற்காகச் செய்யும் சூழ்ச்சியே இத் தொகுதி மறுவரையறை. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட தென் மாநிலங்களையும் தமிழ்நாட்டையும் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக் கூடாது.

தமிழ்நாட்டு அரசியலுக்கு என்று ஒரு அறம் சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது என்றும், அந்த அறநெறி அரசியல் வழியில்தான் அனைவரும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share