திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!
மக்களால் புறக்கணிக்கப்பட்ட திமுக, நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றி கவலைப்படவே போவதில்லை என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு உருக்கமான மற்றும் அதிரடியான மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திமுகவின் விமர்சனங்களுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றதாகப் பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது" என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தவெக-வுக்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த முதல்வர், தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை முன்வைத்தார். தனித்துப் போட்டியிட்ட தவெக 34.92% வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால், கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட திமுக தனிப்பட்ட முறையில் பெற்ற வாக்குகள் வெறும் 24.19% மட்டுமே. தவெக 1,72,26,209 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், திமுகவை விட 52,97,065 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. திமுகவின் கணக்குப்படி பார்த்தால், 76% தமிழக மக்களால் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்ட கட்சி திமுகதான் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அரசுக்குக் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆதரவு அளித்தது குறித்துப் பேசிய அவர், "மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் இந்த இயக்கங்கள் நம்மை ஆதரித்தன. இதை திமுக ஏளனம் செய்வது புரியவில்லை" என்றார். மேலும், 1999-இல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!
திமுக தவெக அரசை 'புஷ்பா அரசு' என ஏளனம் செய்ததற்கு, "தோல்வியால் திமுக பொறாமையில் புகை கக்குகிறது. எங்களைப் புண்படுத்தினாலும், புலம்பினாலும் கவலைப்படப் போவதில்லை; மக்கள் பணியே முக்கியம்" என விஜய் தெரிவித்துள்ளார். "திமுக செய்ய முடியாத பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டும்" என்றும் அவர் உறுதி அளித்தார்.
"நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலில் பின்பற்ற விரும்புகிறோம்" என்று கூறி தனது மடலை முதல்வர் நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!