உதயநிதி vs விஜய்!! அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளிப்பார்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!
சட்டப்பேரவை என்பது மக்களுக்கான அமைப்பு என்றும், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் அல்லது உறுப்பினர் என யாராக இருந்தாலும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் திங்கள்கிழமை பதிலளிப்பார் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தான் எழுப்பும் கேள்விகளுக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்வர் விஜய் உரிய பதிலுடன் தயாராகி திங்கள்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கமாக பதில் அளிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தான் பேரவையில் இல்லாத நேரத்திலும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தன்னிடம் வந்து சேரும் என்றும், அவற்றுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வந்தாச்சு குட்நியூஸ்! காவலர் நாளில் முதல்வர் விஜய் முக்கிய வாக்குறுதி! சிறப்பு வாழ்த்து!
மேலும், தான் பேசும்போது யாரும் பேரவையில் இருந்து வெளியே செல்லக்கூடாது என்று எதிர்க்கட்சியினரிடம் முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தப் பேச்சு சட்டப்பேரவை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில், அமைச்சர் அருண்ராஜின் புதிய கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை என்பது மக்களுக்கான அமைப்பு என்றும், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் அல்லது உறுப்பினர் என யாராக இருந்தாலும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், சட்டப்பேரவையில் பேசப்படும் கருத்துகள் மக்களின் உணர்வுகளையும், அவர்களின் மனநிலையையும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாகவும், கடந்த 100 நாட்களில் மட்டுமே அது சீர்குலைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமர்சித்தார். ஆனால் உண்மை நிலைமை அப்படி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளிக்க உள்ள பதில்கள் மீது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?