மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!
மேட்டூர் அணையிலிருந்து நாளை முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில், எட்டுக் கண் மதகுகளில் அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத் தேவைகளுக்காகச் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து நாளை காலை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வருகை தந்து தண்ணீரைத் திறந்து வைக்கவுள்ள நிலையில், அதற்கான பிரம்மாண்ட முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா பாசனப் பரப்பில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுவீச்சில் மேற்கொள்ளும் வகையில், மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக நாளை காலை 11 மணியளவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர்தூவி பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டுத் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், இன்று அதிகாலை முதலே மேற்கு மண்டலக் காவல்துறை உயர் அதிகாரிகள் மேட்டூர் அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுத் தொடர் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு இன்று நேரில் வருகை தந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நீர் திறக்கப்படவுள்ள பிரதான பகுதியான எட்டுக்கண் மதகுகள் (Eight Vent Sluices) பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அணை மதகுகளின் இயக்கம், நீர் வெளியேறும் வழித்தடங்கள், மேட்டூர் பூங்கா வளாகம் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் விரிவான கள ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!
மேலும், முதலமைச்சரின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வளையங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் தடுப்பு ஏற்பாடுகள் குறித்துக் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், அனைத்து பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குக் கண்டிப்பான அறிவுரைகளை வழங்கினார். முதல்வரின் வருகையால் மேட்டூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், டெல்டா பாசன விவசாயிகள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சி அலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??