அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!
அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக வழங்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த விலை உயர்வை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய விலை ஏற்றம் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் வரை கிலோ 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரையின் விலை, தற்போது கடுமையான தட்டுப்பாட்டின் காரணமாக 70 ரூபாய் வரை எகிறியுள்ளது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீவிரக் கொள்கையின் விளைவாக, சுமார் 25 லட்சம் டன் கரும்பு சர்க்கரை ஆலைகளிலிருந்து எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பி விடப்பட்டதே இந்தச் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சிக்கும் கடுமையான விலை ஏற்றத்திற்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் சர்க்கரையின் தேவை பலமடங்கு அதிகரிக்கும் சூழலில், இந்த விலை உயர்வு ஏழை எளிய குடும்பங்களின் பட்ஜெட்டை அடியோடு சிதைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில உரிமைகள் பறிப்பு! புதிய கனிமவள சட்டத்திருத்தத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டதால், சாலையோரத் தேநீர்க் கடைகளில் கூட ஒரு கப் தேநீர் விலை 15 ரூபாயாகவும், காபி விலை 20 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போது சர்க்கரை விலையும் கூடியுள்ளதால் டீ, காபி விலைகள் மீண்டும் எகிறும் பேராபத்து எழுந்துள்ளது. மற்றொருபுறம் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட விளைச்சல் சரிவு மற்றும் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்படைந்த காரணங்களால் சாப்பாட்டுப் பொன்னி அரிசி கிலோ 80 ரூபாய்க்கும், இட்லி அரிசி கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அத்துடன் உளுத்தம் பருப்பு கிலோ 120-லிருந்து 150 ரூபாயாகவும், கடலைப் பருப்பு 80-லிருந்து 100 ரூபாயாகவும், தனியா 160-லிருந்து 250 ரூபாயாகவும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
எனவே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சந்தை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலமாக அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் வழங்குவதுடன், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ரேஷன் கடைகள் வாயிலாக முற்றிலும் இலவசமாக வழங்கிடத் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அக்கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பங்கேற்க தடை... இடதுசாரி கட்சிகள் தலையில் இடியை இறங்கிய விஜய்... கரப்பான் பூச்சிக்கும் மரண அடி...!