வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! காலை டீ முதல் டின்னர் வரை எல்லாமே விலை உயர்வு!!
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, வடை, பஜ்ஜி விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆம்லெட், பரோட்டா, சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட உணவு வ கைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சமையல் காஸ் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் உணவு வகைகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. டீ, காபி, வடை, பஜ்ஜி மட்டுமின்றி இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆம்லெட், பரோட்டா, சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச் சந்தையில் ஒரு சிலிண்டர் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்தத் தட்டுப்பாடு காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சாலையோர உணவகங்கள் மற்றும் சிறிய ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல உணவகங்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. சில இடங்களில் காலை நேரத்தில் பொங்கல், பூரி விற்பனை நிறுத்தப்பட்டு, மதியம் சாப்பாடு தவிர்க்கப்பட்டு கலவை சாதம் மட்டும் விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!
விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். முன்பு 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி இப்போது 15 முதல் 20 ரூபாயாகவும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட கல் தோசை 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கலவை சாதம் 40 ரூபாயில் இருந்து 60 முதல் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்லெட் விலையும் முட்டை விலை குறைந்த நிலையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
கையேந்தி பவன் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையை உயர்த்தியுள்ளனர். இதை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியாபாரிகள் சிலர் கூறுகையில், “கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் விலை உயர்வு தொடங்கியது. பல உணவகங்கள் சிலிண்டர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. சில கடைகள் காலையிலும், சில மதியத்திலும் மட்டுமே செயல்படுகின்றன. கிரில் சிக்கன், சவர்மா போன்ற உணவுகளின் விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விலை இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தனர்.
சமையல் காஸ் தட்டுப்பாடு தொடர்ந்தால், உணவு விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!