சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!
பெண்கள் எல்லாரும் ஏமாந்த சோணகிரிகள் கிடையாது, 10 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அந்த வழி யாருக்குத் தெரியும்? என சிறுமியின் உறவினர்கள் கதறல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான கார்த்திக், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வந்த அவர், கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்த கார்த்திக்கை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்த போது, காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கண்ணம்பாளையம் அருகே உள்ள பழைய கட்டிடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தப்ப முயன்ற போது, அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கைதிகளுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு, கை மற்றும் காலில் கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மோகன், சூலூர் நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில், சிறுமி விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, குளக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிறுமியின் முக்கு, காது, முகம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் பயங்கர காயம் இருந்ததைக் கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் சிறுமியை துடிதுடிக்க கொன்றவனுக்கு நேர்ந்த கொடூரம்... வலியால் அலறித் துடித்த படி மருத்துவமனையில் அனுமதி...!
இதில் உச்சக்கட்ட அதிர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், சிறுமியின் தலைமுடியைக் கொண்டே கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை நோக்கி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுது ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"பெண்கள் எல்லாரும் ஏமாந்த சோணகிரிகள் கிடையாது, 10 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அந்த வழி யாருக்குத் தெரியும்? எங்கள் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நாங்கள் சும்மா விடமாட்டோம்" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கொந்தளித்த அந்தத் தாய், "உங்களைத் திறமையான ஆள் என்றும், நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பீர்கள் என்று நம்பித்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் இந்த மாபெரும் வெற்றியைத் தந்து முதலமைச்சராக்கினோம்; நீங்கள் சினிமாவில் காட்டும் வீரத்தையெல்லாம் இப்போது நிஜ ஆட்சியில் மக்கள் முன்னிலையில் காட்ட வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும்" என ஆவேசமாக முழக்கமிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் பெண்மணி ஒருவர் ஊடகத்தில் எழுப்பியுள்ள கேள்விகள் ஒட்டுமொத்த பெண்களையும் சிந்திக்க வைத்துள்ளது. "பக்கத்து வீட்டுக்காரன் செஞ்சிருக்கான். யாரை நம்புறது. பணக்காரங்க, கட்சிக்காரங்க, அரசு ஊழியர்கள் எல்லாம் வீட்டுக்கு வீடு கேமரா வச்சுட்டு இருப்பாங்க. பொதுமக்கள் என்ன பண்ணுவாங்க. யாரை நம்புறது சொல்லுங்க. பொதுமக்கள் ரொம்ப கொந்தளிச்சு போய் இருக்காங்க. இந்த சரி பண்றது, சமாதானம் பேசுறதுக்கு எல்லாம் மசிய மாட்டாங்க. நாங்க போராட்டம் பண்ணுவோம். தமிழ்நாடு முழுவதும் பெண்களை திரட்டி போராடுவோம். அவங்க அவங்க வீட்டில் அக்கா, தங்கச்சிக்கு குழந்தை பிறந்தால் தூக்கி கொஞ்சுறீங்க, அவங்களுக்கு குழந்தை பிறந்தாலும் தூக்கி கொஞ்சுறாங்க. எங்க புள்ளைங்கன்னா மட்டும் இழக்காரமா? என காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 10 வயது சிறுமி மரணத்தில் நடுங்கவிடும் திருப்பம்... சிக்கிய காமக்கொடூரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்... நடந்தது என்ன?