×
 

நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருப்பூரில் நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கப் போராடி கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் வெள்ளியம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றோரத்தில் விதிகளை மீறிக் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஜனநாயக வழியில் மறியல் போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்றும், கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், நொய்யல் ஆற்றின் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் தொடர் அலட்சியப் போக்கு குறித்துக் கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வெள்ளியம்பாளையம் நொய்யல் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகளும் கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு நீர்நிலைகள் அடியோடு மாசுபட்டு வருகின்றன. இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, குப்பைக் கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் அமைதியான முறையில் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நீர்நிலைகளையும் காக்கக் களமிறங்கிய போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது காவல்துறையினரை ஏவிக் கைது செய்திருப்பது எதேச்சதிகாரப் போக்கு எனச் சாடியுள்ள வீரபாண்டியன், சுற்றுச்சூழலைக் காக்கப் போராடிய தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், நொய்யல் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share